Monday, December 27, 2010

ஒரு மொழியின் அழிவு ...



சமீபத்தில் அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் "மரியா ஸ்மித் ஜோனெஸ்" என்ற பெண்மணி இறந்து விட்டார். ஒன்பது பிள்ளைகளுக்கு தயான இவர் இறக்கும் போது இவருடைய வயது 89. இவருடைய இறப்பு பலருக்கு துயரத்தை கொடுத்துள்ளது. அவருடைய இழப்பை யாராலுமே ஈடு செய்ய முடியாது என்று சொல்கிறார்கள். பழங்குடி இனத்தை சேர்ந்த மரியா ஸ்மித் அலாஸ்காவில் வாழும் பழங்குடி மக்களின் உரிமைக்காகபல போராட்டங்களை மேற்கொண்டவர்.
ஆனால் அவருடைய இறப்பு யாராலும் ஈடு செய்ய முடியாததாக பார்க்கப்படுவதற்கு காரணம் அது இல்லை. உண்மையான காரணம்,மரியா ஸ்மித் போகும் போது ஒரு மொழியையும் தன்னுடனே சேர்த்துக் கொண்டு போய் விட்டார். ஆம், அலாஸ்காவின் பழங்குடி மக்களின்மொழிகளில் ஒன்றான "ஏயக்" என்கின்ற மொழியை பேசத் தெரிந்தஉலகின் கடைசி மனிதராக அவர் மட்டும்தன் இருந்தார். அவர் இறந்ததன் பிறகு இன்றைக்கு உலகில் யாருக்குமே அந்த மொழியை பேசத் தெரியாது.
அவர் இறந்த தினத்தொடு உலகில் உள்ள பல மொழிகளில் ஒரு மொழிஅழிந்து விட்டது. மரியா ஸ்மித்திற்கு ஒன்பது பிள்ளைகள் இருந்தும், யாருமே "ஏயக்" மொழியை கற்பதற்கு ஆர்வம் காட்டவில்லை. எல்லோரைப் போன்று அவர்களும் ஆங்கிலம் கற்பதும், பேசுவதும்தான் நாகரீகமாதும், தேவையானதும் என்ற கருத்தோடு இருந்து விட்டார்கள்."ஏயக்" மொழியைப் பேசும் கடைசி மனிதராக தான்தான் இருக்கப் போகின்றேன் என்ற விடயம் மரியா ஸ்மித்திற்கு அன்றைக்கு தெரிந்திருந்ததா என்பதும் தெரியவில்லை.

"ஏயக்" மொழி பேசத் தெரிந்த மரியா ஸ்மித்தின் ஒரு சகோதரி1993இலேயே இறந்து விட்டார். அதன் பிறகு மரியா ஸ்மித்தோடு "ஏயக்"மொழியில் உரையாடுவதற்கு யாருமே இருக்கவில்லை. "ஏயக்" மொழிஅழிந்து விடக் கூடாது என்பதற்கு மரியா ஸ்மித் சில நடவடிக்கைகளைமேற்கொண்டார். ஒரு மொழியியல் வல்லுனரின் உதவியோடு "ஏயக்"மொழிக்கான அகராதியையும், இலக்கண நூலையும் தயாரித்தார். இனிமேல் யாராவது இந்த நூல்களின் உதவியோடு ஏயக் மொழியை கற்றுப் பேசினால் மட்டும்தான், அந்த மொழி மீண்டும் உயிர் பெறும். ஏயக் மொழிக்கு மட்டும்தான் இந்த நிலைமை என்று இல்லை. உலகின் பெரும்பாலான மொழிகளின் நிலைமை இதுதான். இரண்டு வாரத்திற்குஒரு முறை உலகின் ஏதோ ஒரு மூலையில் ஒரு மொழி அழிவதாக மொழியியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றார்கள்.
மரியா ஸ்மித் வாழ்ந்த அலாஸ்காவில் பேசப்படுகின்ற மொழிகளில் மேலும் 20 மொழிகள் விரைவில் அழிந்து விடும் நிலையில் இருக்கின்றன.உலகம் எங்கும் மொழிகள் அழிந்து வரும் வேகம் அதிகரிக்கின்றதே தவிர குறையவில்லை. ஒரு மொழி அழிகின்ற பொழுது ஒரு இனத்தின்பண்பாடு அழிகிறது. இன்னும் சொல்வது என்றால் ஒரு இனமே அழிகிறது. அழிகின்ற மொழிகளில் பெரும்பாலானவை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மிகப் பழமையான மொழிகள். அந்தமொழிகளுக்குள் மனித குலத்தின் வரலாற்றின் பெரும் பகுதி புதைந்துகிடக்கின்றது. மொழிகளோடு மனித குலத்தின் வரலாற்று உண்மைகளும்அழிந்து போகின்றன. இன்றைக்கு உலகிலே வாழுகின்ற அறுநூறு கோடிமக்களும் மொத்தம் ஆறாயிரம் மொழிகளைப் பேசுகின்றார்கள். நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆறாயிரம் மொழிகளிலே அறுநூறுமொழிகள் மட்டுமே மிஞ்சியிருக்கும். மிச்சம் ஐந்தாயிரத்து ஐந்நூறுமொழிகளும் அழிந்து விடும். இது மொழியியல் வல்லுனர்களின் தீவிரமான ஒரு எச்சரிக்கை. இன்றைக்கு பேசப்படுகின்ற ஆறாயிரம் மொழிகளில் மூவாயிரம் மொழிகளை ஆயிரத்திற்கும் குறைவானவர்களேபேசுகின்றார்கள். ஏறக்குறைய ஆயிரத்து ஐந்நூறு மொழிகளை நூறு பேர் வரையிலானவர்களே பேசுகிறார்கள். ஐந்நூறு மொழிகளை வெறும் பத்துப்பேர்தான் பேசுகிறார்கள்.
ஒரு மொழி நிலைத்து நிற்பதற்கு ஆகக் குறைந்தது ஒரு இலட்சம்பேராவது அந்த மொழியை பேச வேண்டும் என்பது மொழியியல் வல்லுனர்களின் கருத்து. அந்த வகையில் தமிழ் மொழி தற்போதைக்கு அழியாது என்று நம்பலாம். உலகில் மிக அதிகமானவர்களால்பேசப்படுகின்ற இருபது மொழிகளின் பட்டியலில் தமிழும் இருக்கின்றது.கல்வெட்டில் இருந்து கணணி வரை தமிழ் மொழி பரந்து நிற்கின்றது.ஆனால் ஒரு மொழி அழிவதற்கு தேவையான அனைத்துக் காரணங்களையும் தமிழ் மொழியும் கொண்டுதான் இருக்கின்றது என்பது இதிலே ஒரு அபாயகரமான செய்தி. ஒரு மொழி அழிவதற்கான முக்கிய காரணங்களாக சில விடயங்கள் சுட்டிக் காட்டப்படுகின்றன. மொழிக்குள் மற்றைய மொழிகளின் ஊடுருவலும் ஆதிக்கமும், வட்டாரப் பேச்சு வழக்குகள் தனி மொழிகளாக கிளர்வது, இளந்தலைமுறை மொழியைகற்கவும் பேசவும் ஆர்வம் அற்று இருப்பது போன்றவை ஒரு மொழி அழிவதற்கு முக்கிய காரணங்கள். வேற்று மொழிகளின் ஊடுருவல் தமிழுக்குள் மித மிஞ்சிப் போய் கிடக்கின்றது.
எத்தனையோ சொற்களை, அவைகள் தமிழ் சொற்களா இல்லையா என்பதை அறிவதே மிகக் கடினமாக இருக்கின்றது. அதே போன்று பல துறைகளில் ஆங்கிலம் போன்ற மொழிகளின் ஆதிக்கம் இருக்கின்றது.வட்டாரப் பேச்சு வழக்கு மொழிகளாக இருந்தவை தனி மொழிகளாக பிரிந்து போனதையும் தமிழ் மொழி சந்தித்திருக்கின்றது. இன்றைக்கு தமிழ் கொண்டிருக்கும் நூற்றுக் கணக்கான வட்டார மொழிகள் நாளை தனி மொழிகளாக மாறி விடாது என்று உறுதியாக நம்புவதற்கு போதுமான காரணங்கள் இல்லை. "பொதுவான தமிழ்" இன்றைக்கு எழுத்தில்மட்டும்தான் இருக்கின்றது. ஆனால் "வட்டார மொழி இலக்கியங்கள்" என்ற பெயரில் வருகின்ற அதிகரித்த படைப்புக்கள் இதற்கும் முடிவு கட்டி விடுமோ என்ற அச்சத்தைக் கொடுக்கின்றது. தமிழ் நாட்டின் சென்னை போன்ற பெரு நகரங்களிலும், புலம் பெயர்ந்த நாடுகளிலும் வாழும் இளந்தலைமுறை தமிழை எவ்வளவு தூரம் பேசுவதற்கும், கற்பதற்கும்ஆர்வம் காட்டுகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
இன்றைக்கும் தமிழ் மொழி உயிரோடு இருப்பதன் ஒரே ஒரு காரணம்,தமிழை பேசுபவர்கள் ஆறு கோடிக்கும் மேற்பட்டவர்களாக இருப்பதுதான்.ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை ஒன்றில் முப்பது ஆண்டுகளில்அழியப் போகின்ற மொழிகளில் ஒன்றாக தமிழும் இருப்பதாக செய்தி ஒன்று சில ஆண்டுகளுக்கு முன்பு ஊடகங்களில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் முப்பது ஆண்டுகளில் எல்லாம் தமிழ் அழிந்து விடாது. முப்பது ஆண்டுகள் என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று. அதே வேளை நீண்ட காலத்திற்கு நாம் இப்படி இறுமாப்போடு இருக்கமுடியாது. பேசுபவர்களின் எண்ணிக்கையில் மட்டும் ஒரு மொழியின் இருப்பு தங்கியிருக்க முடியாது. எண்ணிக்கையும் மாறுபடக் கூடிய ஒன்றுதான். மொழி அழிவதற்கு தேவையான மற்றைய காரணிகளும்தமிழில் இருக்கின்றன. ஆகவே தமிழ் மொழி நீடித்து நிலைக்க வேண்டும்என்ற சிந்தனை ஒவ்வொரு தமிழரின் நெஞ்சிலும் இருந்தால் மட்டும்தான், தமிழ் மொழி நீண்ட காலத்திற்கும் நிலைக்கும். இல்லையென்றால் "அழிந்து போன மொழிகளின் பட்டியலில்" தமிழ் இடம் பெறுவது தவிர்க்க முடியாததாகி விடும். மரியா ஸ்மித் ஜோனிஸின் உடலோடு "ஏயக்" மொழியும் புதைக்கப்பட்டுவிட்ட இந்த நாளில் தமிழர்களைப் பார்த்து சொல்லக் கூடிய செய்தி இதுதான்.
தமிழரோடு தமிழில் பேசுவோம்.
நன்றி அருள் குமார்

Sunday, April 4, 2010

பிரிட்டனில் கடை போட்ட தமிழ் வள்ளல்கள்


- மூன்றாம் பகுதி)

வீட்டு வாடகை உச்சத்தில் இருக்கும் நகரங்களில் லண்டனும் ஒன்று. செல்வந்தர்கள் மட்டுமே வசிக்கக் கூடிய மைய நகர்ப் பகுதியை விட்டு விடுவோம், புறநகர்ப் பகுதியில் ஒரு வீடு வாடகைக்கு எடுக்க வேண்டுமானால் சராசரி 800 பவுன் தேவை. அந்த விலைக்கும் வீடு எடுக்க ஆள் இருக்கிறது என்பதால் அங்கே ஒரு நாளும் வாடகை குறையாது. லண்டனைத் தவிர்ந்த வேறு பிரிட்டிஷ் நகரங்களில் வாடகை குறைவு. ஆனால் சர்வதேச சமூகங்களும் கலந்து வாழும் நகரில் வேலை வாய்ப்பு அதிகம் என்பதால், தமிழர்கள் பெரும்பாலும் லண்டனில் வசிக்க விரும்புகின்றனர்.

சட்டப்படி பதிந்து வேலை செய்யும் ஒருவரின் அடிப்படை சம்பளமே 1000 பவுனுக்கு மேலே செல்லாது. இதனால் வருமானம் குறைந்த மக்களுக்காக வாடகையின் பெரும் பகுதியை அரசாங்கம் சமூக நல கொடுப்பனவின் மூலம் ஈடுகட்டுகின்றது. வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் வெள்ளையர்கள் பயன்படுத்தும் சலுகையை, தமிழர்கள் பலர் அனுபவிப்பதில்லை. அதற்கான காரணங்களாவன: அரசின் சமூகக் கொடுப்பனவுகளைப் பெற்று தம்மை வசதியற்றவர்களாக காட்டிக் கொள்ள பலர் வெட்கப்படுவது. பாரம்பரிய நிலப்பிரபுத்துவ கலாச்சாரத்தின் படி, கஷ்டம் வரும் நேரம் உறவினர், நம்பர்களின் உதவியில் தங்கியிருத்தல். அரசாங்கத்தின் சமூக நலன்புரி திட்டங்கள் குறித்த அறிவின்மை என்பதாகும்.

அதே நேரம், புதிதாக லண்டன் வருபவர்கள், வதிவிட அனுமதிப் பத்திரத்திற்காகவோ, அன்றேல் அகதி அந்தஸ்து பெறுவதற்கோ நீண்ட காலம் காத்திருக்க வேண்டியேற்படுகிறது. காத்திருக்கும் காலத்தில் கிடைக்கும் தற்காலிக தொழில் அனுமதிப் பத்திரத்தை எடுத்தவுடன் (தற்போது அதை நிறுத்தி விட்டார்கள்) வேலை தேடக் கிளம்பி விடுவார்கள். லண்டன் நகரில் தெரிந்த உறவினர், நண்பர் வீட்டில் தங்கி இருந்து கொண்டு எங்காவது வேலை செய்கின்றனர். அவருக்கு இடம் கொடுக்கும் வீட்டுக்கடன் கட்டுபவர்களும், வாடகை கட்டுவோரும் தமது செலவை பங்கிட்டுக் கொள்கின்றனர்.

சிலநேரம் வேலை செய்யும் இடம் வெகு தூரத்தில் இருக்கலாம். அப்படியான தருணத்தில் வேலை செய்யும் இடத்திற்கு அருகாமையில் வதிவிடம் இருப்பது அவசியம். (அதி விரைவு சுரங்க ரயில் பயணமே சில நேரம் இரண்டு மணித்தியாலம் எடுக்கும்.) ஹோட்டல், ரெஸ்டாரன்ட் வேலைக்கு தமிழ் தொழிலாளர்களை எடுத்துக் கொடுக்கும் முகவர்கள், தாமே வதிவிடத்தை ஒழுங்கு பண்ணிக் கொடுக்கின்றனர். அப்படியான "தொழிலாளர் விடுதி" ஒன்றை காண நேர்ந்தது. ஒரு குறிப்பிட்ட ஹோட்டலில் வேலை செய்யும் தமிழ் தொழிலாளர்கள் அனைவரும் அந்த வீட்டில் தங்கி இருந்தனர். நான்கு படுக்கை அறைகளை கொண்ட வீட்டில் 10 பேர் தங்கியிருக்கின்றனர்.

அங்கு வசிப்பவர்கள் குறிப்பிட்ட வீட்டை "அகதி முகாம்" என்று பட்டப் பெயரால் அழைக்கின்றனர். அவர்களை ஹோட்டலுக்கு வேலைக்கு அனுப்பும் முகவருக்கு சொந்தமானது அந்த வீடு. வீட்டில் வசிக்கும் தொழிலாளிகளுக்கு கொடுக்கும் சொற்ப சம்பளப் பணத்திலேயே வாடகையை கழித்துக் கொள்கிறார். வீட்டை அடமானம் வைத்து வாங்கியிருந்த அந்த முகவர், கூடிய சீக்கிரமே வீட்டுக் கடனை அடைத்து விடும் நம்பிக்கையில் இருக்கிறார். அதற்கு காரணம், அங்கே தங்கி இருக்கும் ஒவ்வொருவரிடமும் 200 பவுன்கள் வாடகை அறவிடுகிறார். இன்னொருவனின் உழைப்பில் ஒரு வீட்டை சொந்தமாக்கிக் கொள்ளும் சாமர்த்தியம் யாருக்கு வரும்?

புதிதாக பிரிட்டன் வரும் பலருக்கு வேலை வழங்கும் இன்னொரு துறை, தமிழர் கடைகள். புலம்பெயர் மண்ணில் தமிழ் கலாச்சாரத்தை காப்பற்றும் திருப்பணியை சிரமேற்கொண்டு, இந்திய,இலங்கை இறக்குமதிப் பொருட்களுடன் பல கடைகள் காணப்படுகின்றன. லண்டன் வாழ் தமிழ் சமூகத்திற்கு சேவை செய்வதற்கு தேவையான மனித உழைப்பையும் அந்த சமூகத்தில் இருந்தே பெற்றுக் கொள்கின்றனர். ஒரு கடையில் ஐந்து பேர் வேலை செய்தால், ஒருவரை மட்டும் சட்டப்படி பதிந்து வைத்திருப்பார்கள். (வேலைக்கு எடுக்கும் ஒவ்வொரு நபருக்கும் அரசுக்கு வரி கட்ட வேண்டும்.) முன்னர் சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருப்பவர்களை வேலைக்கு அமர்த்த விரும்பினார்கள். (அப்போது தானே விரும்பிய படி சுரண்டலாம்.) தற்போது போலிஸ் கெடுபிடி காரணமாக, மாணவர்களை வேலைக்கு அமர்த்துகிறார்கள். அவர்களுக்கும் சட்டப்படி வாரம் 20 மணித்தியாலங்களே வேலை செய்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மேலதிகமாக வாரம் 30 மணித்தியாலங்களாவது சட்டவிரோதமாக வேலை செய்கின்றனர்.

லண்டன் மாநகரத்தின் சில பகுதிகள் குட்டி சென்னை, குட்டி யாழ்ப்பாணம், என்று குறிப்பிடுமளவிற்கு தமிழர்கள் செறிந்து வாழ்கின்றனர். இதனால் தமிழ்க் கடைகளுக்கிடயிலான போட்டி காரணமாக அடிக்கடி மலிவு விற்பனை அறிவிப்புகள் காணப்படும். மலிவு விற்பனையில் குறைக்கப்படும் விலையானது, சட்டவிரோதமாக சுரண்டப்பட்ட கடைச் சிப்பந்திகளின் உழைப்பு என்பதால் வியாபாரிகளுக்கும் கவலையில்லை. இதைவிட மேலதிக விற்பனை வரியில் குளறுபடி செய்வது மட்டுமல்ல, பிற வரி ஏய்ப்புகளுக்கு கணக்கு போட்டுக் கொடுப்பதற்கு தமிழ் கணக்காளர்கள் இருக்கிறார்கள். தமிழ்க் கடைகளுக்கு கணக்கு சரி பார்க்கும் அக்கவுண்டட் ஒருவர் "பணக்கார ஏரியா" எனக் கருதப்படும் லண்டன் வட்டாரமொன்றில் வசிக்கிறார். இவர் தனது சொந்த வீட்டை மட்டுமல்லாது, சின்ன வீட்டு செலவுகளையும் சிறப்பாகவே பராமரித்து வந்துள்ளார். எனக்குத் தெரிந்த வரை, தனது வைப்பாட்டிக்கு மாத்திரம் மாதம் 2000 பவுன் செலவிடும் அளவிற்கு சுரண்டலில் பங்கெடுத்துள்ளார்.

பிரிட்டனில் தமிழ் முதலாளிகள் தமிழ்க் கடைகள் மட்டுமல்ல, "ஆங்கிலக் கடைகளையும்" நடத்தி வருகின்றனர். பெரும் முதலாளித்துவ நிறுவனங்கள் மேலும் மேலும் வளர்ந்து வரும் ஒரு நாட்டில், தனியொரு நபர் நடத்தும் சிறு கடைகள் நிலைத்து நிற்க முடிவதில்லை. சிறு வணிக முயற்சிகளை ஆதரிக்கும் அக்கறையும் அரசுக்கு இல்லை. அதிலும் குறிப்பாக நகரங்களில் உழைக்கும் வர்க்க மக்கள் வாழும் பகுதிகளில் எந்தவொரு வர்த்தக முயற்சியும் வீண் விரயமாகும். அப்படியான இடங்களில் நஷ்டத்தில் நடக்கும் கடைகளை, தமிழர்கள் வாங்குகின்றனர். அவற்றில் 4 பவுன் கூலிக்கு தமிழ் இளைஞர்களை வேலைக்கு அமர்த்திக் கொண்டு வியாபாரம் செய்கின்றனர். அது தான் வெள்ளையின கடை முதலாளிகளுக்கு "தெரியாத வியாபார சூட்சுமம்".

பிரிட்டனில் ஒரு "பெட்டிக்கடை" வைத்திருப்பவர்கள், தம்மை ஒரு பெரிய கம்பனியை நிர்வகிக்கும் தொழில் அதிபர் போல பாவனை செய்து கொள்கின்றனர். வெள்ளையின மேலாதிக்கம் நிலவும் பிரிட்டிஷ் தொழிலகங்களில் வேலை செய்வதை விட, சுய மரியாதையுடன் சொந்தமாக வியாபாரம் செய்வதாக ஒரு கடை முதலாளி தெரிவித்தார். அப்படியானவர்கள் தம்மிடம் வேலை செய்யும் தொழிலாளரின் சுய மரியாதை பற்றி சிந்திப்பதில்லை. எடுபிடிகளாக நடத்துவதற்கு வசதியாக, இளம்பராய மாணவர்களை பணியில் அமர்த்துகின்றனர். 4 பவுன் கொடுத்து தினசரி வேலை வாங்குவதால் வெறுத்துப் போன கடைச் சிப்பந்திகள், சில்லறைத் திருட்டுகளையும் கண்டு கொள்வதில்லை. வர்க்க ஒற்றுமையில் இருந்து வெளிப்படும் உணர்வு அது. "எனது முதலாளி திருடுவதை விட அதிகமாக இந்த அற்பர்கள் எடுத்துச் செல்லப் போவதில்லை." என்று நியாயம் கற்பித்தார் எனது நண்பர் ஒருவர்.

உழைக்கும் வர்க்க குடியிருப்புகளில் வாழும் வெள்ளையின சிறுவர்கள், வறுமை காரணமாக சிறு திருட்டுகளில் ஈடுபடுகின்றனர். ஒரு பவுனும் பெறுமதியில்லாத சாக்லேட், சிப்ஸ் பக்கட் போன்றவற்றை தான் தூக்கிச் செல்கின்றனர். பாடசாலை விடும் நேரம் கூட்டமாக நுழையும் சிறுவர்களே சில்லறைத் திருட்டுகளில் ஈடுபடுகின்றனர். சில கடை உரிமையாளர்கள் திருட்டு முயற்சிகளை தடுப்பதில் வரம்பு மீறுகின்றனர். (சாக்லேட் திருடிய வெள்ளையின சிறுவனை நிலத்தில் தள்ளி வீழ்த்தி அடிக்கப் போனதாக ஒரு கடை உரிமையாளர் தெரிவித்தார்.) இது சில நேரம் இனங்களுக்கிடையிலான பகை உணர்ச்சியை கிளறி விடுகிறது. மேலும் வேலையற்ற வெள்ளையின மக்கள் மத்தியில், தெற்காசிய சமூகத்தை சேர்ந்தவர்களின் செல்வச் செழிப்பு பொறாமைத் தீயை மூட்டுகின்றது. இப்படியான சந்தர்ப்பங்களில், BNP போன்ற பிரிட்டிஷ் இனவாதக் கட்சிகள் வெள்ளையின உழைக்கும் வர்க்க குடியிருப்புகளில் வாக்கு வேட்டையாடுகின்றன.

உழைப்பால் உலர்ந்த லண்டன் தமிழர்கள்


- இரண்டாம் பகுதி

"Londinium" என்று ரோமர்கள் வைத்த பெயர், இன்று லண்டனாக திரிபடைந்து உலகப் பெரும் நகரங்களில் ஒன்றாக திகழ்கின்றது. இங்கிலாந்து என்று அறியப்படும் பிரதேசத்தை கைப்பற்றிய ரோமர்கள், அதை பாதுகாக்க ஜெர்மன் இனக்குழுக்களை குடியேற வைத்தார்கள். தேம்ஸ் நதிக்கரையில் உருவான பண்டைய ஆங்கிலேய (ஜெர்மன் இனக்குழு ஒன்றின் பெயர்) குடியேற்றங்களில் ஒன்று "ஸ்டேனா" (கல் என்ற அர்த்தம் வரும் பழைய ஆங்கிலச் சொல்.)

இன்று அந்த இடம் ஹீத்ரூ விமான நிலையம் அருகில், லண்டன் மாவட்ட நிர்வாகத்தை சேர்ந்த பகுதியாக உள்ளது. ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடம், எனது தற்காலிக வதிவிடமாக அமைந்தது. வெளிநாட்டவர்களால் நிரம்பி வழியும் லண்டன் புறநகர்ப் பகுதிகளைப் போலன்றி, வெள்ளயினத்தவர்களை பெரும்பான்மையாக கொண்டது. அங்கிருந்து சில மைல் தொலைவில் "வின்சர் கோட்டை" அமைந்துள்ளது. இன்று பிரபல சுற்றுலாத் தலமாக இருந்த போதிலும், வின்சர் கோட்டை பெறுமதி மிக்க அரச வம்ச சொத்துகளில் ஒன்று.

நான் குறிப்பிடும் சுற்று வட்டாரத்தில், உலகை மாற்றிய மாபெரும் வரலாற்று நிகழ்வு ஒன்று இடம்பெற்றது. பிற நாடுகளைப் போல லண்டனிலும் அரசன் கையில் அனைத்து அதிகாரங்களும் குவிந்திருந்தன. அரசனுக்கு அடுத்ததாக அரசியல் செல்வாக்கு மிக்க நிலப்பிரபுக்கள், அரச அதிகாரத்தில் பங்கு கேட்டு போராடினார்கள். இந்த இரண்டு அதிகார மையங்களும் இறுதியில் "மக்னா கார்ட்டா" என்ற பெயரிலான ஒப்பந்தம் மூலம் அதிகாரத்தை பகிர்ந்து கொண்டனர். பிற்காலத்தில் வந்த அரச அமைப்பு சட்டங்களின் முன்னோடியாக, மக்னா கார்ட்டா கருதப்படுகின்றது. அந்த ஒப்பந்தம் கைச் சாத்திட்ட இடத்தில் தற்போது ஒரு ஆடம்பர ஹோட்டல் கட்டப்பட்டுள்ளது. உள்நாட்டு/வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வின்சர் கோட்டை செல்லும் வழியில், அந்த ஹோட்டலில் தங்கி உணவருந்தி விட்டு செல்வது வழக்கம்.

வரலாற்று சிறப்பு வாய்ந்த இடத்தில் அமைந்துள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில், குறைந்தது இருபது தமிழர்களாவது வேலை செய்கின்றனர். அவர்களோடு ஒரு சில சிங்கள இளைஞர்களும் பணியாற்றுகின்றனர். அனைவரும் ஹோட்டல் அறைகளை சுத்தமாக்குவது, சமையலறையில் பாத்திரங்களை கழுவுவது போன்ற துப்பரவுப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்களைத் தவிர, போலந்து நாட்டுக்காரர்கள் சமையல் உதவியாளராகவும், உணவு உபசாரகர்களாகவும் பணியாற்றுகின்றனர். அவர்கள் எல்லோரும் சந்திக்கும் இடமாக, ஹோட்டலின் மையப் பகுதியான சமையலறை உள்ளது. எனக்கும் அவ்விடத்தில் ஒரு சில நாட்கள் வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

இருபதுக்குமதிகமான தமிழர்கள் வருடக்கணக்காக வேலை செய்து கொண்டிருப்பதால், அங்கே ஆங்கிலத்துக்கு அடுத்த இரண்டாவது மொழியாக தமிழ் உள்ளது! ஹோட்டலில் பணி புரியும் வேற்றினத்தவர்களும், தமிழில் உள்ள கெட்ட வார்த்தைகளை எல்லாம் சிரத்தையோடு கற்றுக் கொண்டிருக்கிறார்கள். தேமதுரத் தமிழோசை லண்டனிலும் ஒலிக்கின்றது. தமிழ் தொழிலாளர்கள் அனைவரும் 18 ல் இருந்து 30 வயதிற்கு இடைப்பட்டவர்கள். ஒரு சில வருடங்களுக்கு முன்னர் வேலை செய்த அனைவரும் விசா இன்றி சட்டவிரோதமாக தங்கி இருந்தவர்கள். வேறு எங்கேயும் அவர்களுக்கு தொழில் வாய்ப்பு இல்லை என்பதால், ரெஸ்டாரன்ட் வேலை ஒரு வரப்பிரசாதமாக இருந்தது. ஆனால் அண்மைக்கால போலிஸ் கெடுபிடி காரணமாக, அப்படியானவர்களை வைத்திருக்க தொழில் வழங்குனர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

பெருமளவு உல்லாசப் பிரயாணிகளை கவரும் மேற்கு ஐரோப்பிய நகரங்களில் உள்ள ஹோட்டல், ரெஸ்டாரன்ட் தொழிற்துறை யாவும் வெளிநாட்டுத் தொழிலாளரின் உழைப்பில் தங்கி இருக்கின்றன. லண்டனும் அதற்கு விதிவிலக்கல்ல. வேலை தேடித்தரும் முகவர்களும் இடைத்தரகர்களாக தொழில் சந்தையில் குதித்துள்ளனர். பிற வணிக நிறுவனங்களைப் போல உணவு விடுதிகளும் தமக்கு தேவையான தொழிலாளருக்கு முகவர்களை நாடுகின்றன. பெரும்பாலும் அந்நாட்டு வெள்ளையர்களே நடத்தும் முகவர் நிலையங்கள் தெற்காசிய சமூகங்களுக்குள் ஊடுருவ முடிவதில்லை. மொழிப்பிரச்சினை, சரியான தொடர்புகள் இன்மை போன்ற இன்னோரன்ன காரணங்களால் அந்தந்த சமூகங்களை சேர்ந்த முகவர்களை நாடுகின்றனர்.

இங்கிலாந்துக்கு புதிதாக வரும் சீனர்களை, சீன உணவுவிடுதிகளில் அடிமை வேலைகளில் ஈடுபடுத்தும் சீன மாபியாக்கள் பற்றிய செய்திகளுக்கு ஊடகங்கள் அக்கறை காட்டுகின்றன. மாபியா ஆட்கடத்தல்காரர்கள், சீனாவில் இருந்து கிளம்ப பயணச் செலவுக்கு லட்சக்கணக்கில் கடனாக அள்ளிக் கொடுப்பார். பின்னர் ஏதாவதொரு லண்டன் ரெஸ்டாரன்ட் ஒன்றில் வேலை எடுத்துக் கொடுத்து, அந்தப் பணத்தை வட்டியுடன் திருப்பி அறவிடுகின்றனர். கிட்டத்தட்ட அதே மாதிரியான நிலையில் இருந்த இந்தியத் தமிழ் இளைஞரை சந்திக்க நேர்ந்தது. அவரின் பிரயாணத்திற்கு ஒழுங்கு செய்த ஆட்கடத்தல்கார கும்பல், ஈஸ்ட்ஹமில் (லண்டன் புறநகர்) தமிழருக்கு சொந்தமான கடை ஒன்றில் வேலை எடுத்துக் கொடுத்திருந்தது. ஊரில் வறுமையான பின்னணியில் இருந்து வந்த அந்த நபர், வருடக்கணக்காக வேலை செய்து கடனை அடைக்க வேண்டும். இந்த எழுதாத சட்டத்தை மீறி எங்கே தப்பி ஓடினாலும், எப்படி பிடிப்பது என்பது அவர்களுக்கு தெரியும்.

மாபியாக்களைப் போல, வெளிநாட்டுத் தொழிலாளர்களை அடிமைகளாக நடத்தா விட்டாலும், அவர்களின் உழைப்பை சட்டபூர்வமாக சுரண்டும் முகவர்களும் இருக்கிறார்கள். அநேகமாக மதிப்பு மிக்க பிரிட்டிஷ் ஹோட்டல், ரெஸ்டாரன்ட் நிர்வாகங்கள் சட்டபூர்வ முகவர்களின் உதவியை நாடுகின்றன. ஒரு தொழிலாளிக்கு இவ்வளவு காசு என்று, மனிதர்களுக்கு விலை பேசுகின்றன. குறைந்த விலைக்கு ஆள் பிடித்து தருவதாக ஒப்பந்தம் செய்யும், தெற்காசிய சமூகத்தை சேர்ந்த முகவர் ஒருவர், தனது இனத்தை சேர்ந்த தொழிலாளர்களை வாடகைக்கு அமர்த்துகின்றார். இதனால் தொழிலாளர் நல காப்புறுதிகளை கட்டாமல் நிறுவனங்கள் மிச்சம் பிடிக்கின்றன. அவர்களுக்கு வழங்கப்படும் செலவினம் சம்பளமாக கருதப்படாமல், வெளியாரின் சேவைக்கு வழங்கப்பட்ட விலையாக கருதப்படுவதால், வரிச் சலுகை கிடைக்கிறது.

தொழிலாளர்களை விநியோகம் செய்யும் முகவர் எந்த அளவு குறைந்த டெண்டருக்கு எடுத்திருந்தாலும், ஒரு தலைக்கான விலை, எப்படியும் அடிப்படை சம்பளத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும். வெள்ளையின ஆங்கிலேய முகவர்கள் நடத்தும் நிலையங்களைப் பற்றி இங்கே குறிப்பிடவில்லை. அவர்களுக்கு எப்படியும் சராசரி சம்பள தொகையை விட மூன்று மடங்கு அதிகமாகவே பணம் கிடைக்கிறது. வேலை நேரம், ஓவர் டைம் எல்லாவற்றையும் சரியாக கணித்துக் கொள்கின்றனர். தமது தொழிலாளருக்கு அரசு நிர்ணயித்த சம்பளம் கொடுக்கின்றனர். ஆனால் தமிழ் அல்லது ஆசிய முகவர்கள் அப்படி அல்ல. இவர்கள் தொழிலாளிக்கு ஒரு கணக்கும், ஹோட்டலுக்கு இன்னொரு கணக்கும், அரசாங்கத்திற்கு வேறொரு கணக்கும் காட்டுகின்றனர்.

பிரிட்டனில் வேலை செய்யும் அடிமட்ட தொழிலாளிக்கும் அடிப்படை சம்பளம் ஒன்றை அரசு நிர்ணயித்திருக்கிறது. ஒருவர் என்ன வேலை செய்தாலும், மணித்தியாலம் 5.80 பவுன் கூலி கொடுக்க வேண்டும் என்பது அரசு போட்ட சட்டம். அது கூட ஒரு சராசரி வாழ்க்கை செலவுக்கு தேவையானதை விட குறைவாகவே நிச்சயிக்கப்பட்டுள்ளது. தொழில் முறை ஒப்பந்தம் செய்து கொள்ளும் முதலாளி அதற்கு குறைவான சம்பளத்தை பதிந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் வெள்ளையின முதலாளிகளே, பெரும்பாலும் ஒப்பந்தப் படி பேசிய கூலியை கொடுக்கின்றனர். தமிழ் தொழிலாளிகளை பணியில் ஈடுபடுத்தும் தமிழ் முதலாளியோ, அல்லது முகவரோ தாமாகவே ஒரு சந்தை விலையை தீர்மானிக்கின்றனர்.

ஒரு மணி நேர உழைப்புக்கு நான்கு பவுன் என்பது, தமிழரின் உழைப்புக்கு தமிழ் முதலாளிகள் நிர்ணயிக்கும் சராசரி விலை. (சில இடங்களில் மூன்று பவுன் கொடுக்கிறார்கள்.) கவனிக்கவும்: சட்டப்படி ஒப்பந்தம் செய்தாலும் அதிலே 5.80 பவுன்கள் என்று தான் குறிப்பிடுகிறார்கள். ஆனால் கையில் கொடுப்பது 4 பவுன். இதனால் ஒரு அப்பாவி தொழிலாளியின் 1.80 பவுன் பெறுமதியான உழைப்பை திருடுகின்றனர். நான் சென்று பார்த்த ஹோட்டலில் எடுத்த அண்ணளவான கணிப்பின் படி, மாதம் 7500 பவுன்கள் இவ்வாறு ஒரு முகவரின் பைக்குள் செல்கின்றது. விசா இன்றி சட்டவிரோதமாக வேலை செய்யும் தொழிலாளர்கள் அதையே சம்பளமாக ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால் மாணவர்கள் போன்ற, தொழில் அனுமதிப் பத்திரம் பெற்றவர்களும் அதை ஏற்றுக் கொள்வது ஆச்சரியமானது. பலர் இந்த திருட்டை பற்றி தெரிந்து வைத்திருக்கின்றனர். ஆயினும் நாட்டில் நிலவும் வேலையில்லா திண்டாட்டமும், போட்டியும் அவர்களின் வாயை மூட வைக்கிறது.

மணித்தியாலம் 4 பவுனுக்கு வேலை செய்வதால், மாத முடிவில் சொற்ப தொகையே சம்பளமாகக் கிடைக்கிறது. (அதைக் கூட மாத முடிவில் கொடுப்பதில்லை. இரண்டாவது மாதமே கிடைக்கிறது.) இதனால் பெரும்பான்மையான தொழிலாளர்கள் "ஓவர் டைம்" வேலை செய்கிறனர். பிரிட்டிஷ் சட்டப்படி, மேலதிக வேலை நேரத்திற்கு உரிமையான பிரத்தியேக கொடுப்பனவு வழங்கப்படுவதில்லை. (ஆனால் ஹோட்டல் நிர்வாகம் கொடுத்து விடுகின்றது.) நான் அவதானித்த அளவில், ஒரு தொழிலாளி சராசரி ஒரு நாளைக்கு குறைந்தது 12 மணி நேரம் வேலை செய்கிறார். ஹோட்டல்களில் "ஷிப்ட்" முறை உள்ளதால், அட்டவணைப் படி ஓய்வு நாள் கிடைக்கிறது. ஆனால் கடைகளில் சிப்பந்திகளாக பணியாற்றுபவர்கள் தினசரி வேலைக்கு சமூகமளிக்க வேண்டும்.

இலங்கை, இந்தியாவில் இருந்து லண்டன் வந்த பலர், காணியை, நகையை அடவு வைத்து கடன் எடுத்து வந்திருப்பார்கள். அவர்களுக்கு வேறு வழி இல்லை. கடனை அடைக்க வேண்டுமென்றால், உழைப்புச் சுரண்டலை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும். அவர்களின் கையறு நிலையை தமிழ் முதலாளிகளும், முகவர்களும் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர். அப்பாவிகளின் உழைப்பை சுரண்டி, லண்டனில் வசதியான வீடு, மெர்செடெஸ் கார் என்று வாங்கித் தள்ளுகின்றனர். இறுதியில் தமிழ் தொழிலாளர்களின் உழைப்பு உற்பத்தி செய்து குவித்த பணம், பிரிட்டிஷ்காரர்களின் கஜானாவை சென்று நிரப்புகின்றது.

லண்டன் உங்களை வரவேற்கிறது!

"கோழி மேய்த்தாலும் சீமையிலே மேய்க்க வேண்டும்." பாட்டி காலத்து பழமொழியில் வரும் "சீமை" என்பது இங்கிலாந்தைக் குறிக்கும், என்று எமது தமிழ் வாத்தியார் சொல்லித் தந்திருக்கிறார். அந்தப் பழமொழி எல்லாம் பிரிட்டிஷ் காலனிக் காலத்து சமாச்சாரம் என்று தான் அப்போதெல்லாம் நினைத்திருந்தேன். நானும் ஏதோ விதிவசத்தால் லண்டன் மாநகரில் தங்கியிருந்த காலத்தில், அது இன்றைக்கும் ஏற்றுக் கொள்ளக் கூடிய பொன்மொழி என்று தெரிந்து கொண்டேன். முன்னாள் பிரிட்டிஷ் காலனிகளின் இன்றைய இளந்தலைமுறை லண்டனை தமது தலைநகரமாக வரித்துக் கொண்டு விட்டார்கள். தாய் எந்த மொழி பேசினாலும், சேயின் மொழி ஆங்கிலமாக இருக்கும் காலம் இது. தப்பித் தவறி வேற்று மொழி பேசும் நாட்டில் திரவியம் தேட சென்று தங்கி விட்டவர்களும், "என் பிள்ளை ஆங்கிலத்தில் படிக்க வேண்டும்" என்று கூறிக் கொண்டு இங்கிலாந்து சென்று குடியேறுகிறார்கள்.

அடியேனுக்கு அப்படியொரு பிறவிப் பெரும்பயனைக் கடைத்தேறும் பாக்கியம் பல காலமாக கிட்டவில்லை. அதனால் ஒரு வருத்தமும் இல்லை. இருப்பினும் பாழாய்ப் போன பொருளாதார நெருக்கடியும், அதைத் தொடர்ந்த வேலை இழப்பும், என்னையும் லண்டன் சென்று வேலை தேட உந்தித் தள்ளியது. நானும் தப்பித்தவறி ஐரோப்பிய ஒன்றிய பிரஜை ஆகிவிட்டதால், இன்னொரு ஐரோப்பிய நாட்டில் தொழில் தேடும் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டேன். ஐரோப்பிய நாடுகள் ஒவ்வொன்றும் தமக்கென மொழியை கொண்டிருப்பதால், நெதர்லாந்தை தவிர்த்து இங்கிலாந்து சிறந்த தெரிவாகப் பட்டது. முதலாம் வகுப்பில் இருந்து, இரண்டாம் மொழி என்ற பெயரில் திணிக்கப்பட்ட ஆங்கிலம் உதவலாம், என்று நண்பர்களும் ஆலோசனை கூறினார்கள்.
நான் லண்டன் செல்வது இதுவே முதல் தடவை அல்ல. இருப்பினும் இம்முறை வேலை தேடி "செட்டில்" ஆகி விடும் யோசனை இருந்ததால், அதற்கான தயார் படுத்தல்களுடன் சென்றேன்.

லண்டன், ஹீத்ரூ விமான நிலையத்தில் வந்திறங்கியதுமே குடியேற்ற இலாகாவின் போலிஸ் கெடுபிடி வழமையை விட அதிகமாக இருந்தது. எனக்கு முன்னால் போன வெள்ளையின பயணிகள் எந்தவித தாமதமும் இன்றி பரிசோதித்து அனுப்பப்பட்டனர். எனது முறை வந்ததும், சுமார் பத்து நிமிடங்கள் காக்க வைத்தனர். எனது நெதர்லாந்து பாஸ்போர்ட்டை பிய்த்து எடுக்காத குறை. அந்த அதிகாரி தனக்கு தெரிந்த வழியில் எல்லாம் பாஸ்போர்ட்டை சோதித்துப் பார்த்து விட்டுக் கேட்டாரே ஒரு கேள்வி. "யாழ்ப்பாணத்தில் பிறந்த உனக்கு எவ்வாறு நெதர்லாந்து பாஸ்போர்ட் கிடைத்தது?" என்ன செய்வது? எந்தவொரு சர்வதேச விமான நிலையத்திலும், எமது தோல் நிறத்தைக் கண்டவுடன், திருடனைப் போலப் பார்க்கும் அவமானத்தைப் பொறுத்துக் கொண்டு தான் எல்லைகளைக் கடக்க வேண்டியுள்ளது. லண்டன் உங்களை வரவேற்கிறது!

நீண்ட காலமாக பிரிட்டனில் "உலகில் சிறந்த சுதந்திர சமூகம்" இருந்தது. வங்கியில் கணக்குத் திறப்பது என்றாலும் ஒருவரிடம் அடையாள அட்டை கேட்க மாட்டார்கள். ஏனெனில் அது தனிநபர் சுதந்திரத்தை பாதிக்குமாம். இதனால் விசா இன்றி சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்கள், அடையாள அட்டை இல்லாமலே (அல்லது விசா இன்றி) வேலை செய்து பிழைக்க முடிந்தது. சில ஆசாமிகள் இரண்டு, மூன்று வங்கிகளில் கணக்கை திறந்து விட்டு, கணிசமான தொகையை கடனாகப் பெற்று கம்பி நீட்டி விடுவார்கள். "தமது பிள்ளைகள் ஆங்கிலத்தில் படிக்க வேண்டும்" என்ற ஒரே காரணத்தால் லண்டன் வந்ததாக கூறிக் கொள்பவர்கள் கூட, சட்டவிரோத செயல்களுக்கு வாய்ப்பு இருப்பதாலேயே வருகின்றனர். இதனால் பலரிடம் கருப்புப்பணம் தாராளமாக புழங்குகின்றது.

ஜனநாயகம், சுதந்திரம் என்றெல்லாம் உலகத்திற்கு பவிசு காட்டப் போக, அதனை குற்றச் செயல் புரிவோர் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர். பிரிட்டிஷ் அரசு அதிகரிக்கும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறிக் கொண்டிருக்கையில், ஒசாமா பின்லாடன் வடிவில் எதிர்பாராத உதவி கிடைத்தது. 2001 செப்டம்பர் 11 க்குப் பிறகு, பயங்கரவாத எதிர்ப்பு என்ற பெயரில் கடுமையான சட்டங்களை அமுல்படுத்த ஆரம்பித்தார்கள். அப்போதும் "இதெல்லாம் அமெரிக்க சமாச்சாரம், நமக்கு சரிப்பட்டு வராது", என்று யாராவது சொல்லிக் கொண்டிருந்தார்கள். லண்டன் சுரங்க ரயில் குண்டுவெடிப்பு அவர்கள் வாயை அடைத்தது. தனிநபர் சுதந்திரங்கள் மெல்ல மெல்ல கட்டுப்படுத்தப் பட்டன. தற்போதைய லேபர் கட்சி பிரதமர் பிரவுனின் ஆட்சி, கன்சர்வேடிவ் தாட்சரின் கொடுங்கோல் ஆட்சியை நினைவுபடுத்துவதாக வெகுஜன பத்திரிகைகளே புலம்புகின்றன.

பிரிட்டிஷ் விசாவுக்கு விண்ணப்பிக்கும் போது படிவத்தில் காணப்படும் கேள்விக் கொத்து, அரசு எவ்வளவு கண்காணிப்பாக இருக்கிறது என்பதை தெரிவிக்கும் முதல் படி. "நீங்கள் கடந்த காலத்தில் பயங்கரவாத அமைப்பில் சம்பந்தப் பட்டிருந்தீர்களா?", "பயங்கரவாதத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்தீர்களா?" இப்படிப் பல. பிரிட்டிஷ் அரசு அறிவித்த பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலை அவதானித்தால், அவற்றில் முக்கால் வாசி மூன்றாம் உலக நாடுகளை சேர்ந்திருக்கும். இங்கிலாந்தில் தெற்காசிய சமூகத்தவர்கள் கல்வியில் சிறந்தவர்கள், உயர் பதவிகளை அலங்கரிப்பவர்கள் என்பதெல்லாம் இனிமேலும் சாத்தியப்படுமா தெரியவில்லை. குறிப்பாக தெற்காசிய முஸ்லிம் பிரிட்டிஷ் இளைஞர்கள் விமான சேவை போன்ற துறைகளில் இருந்தால் சந்தேகிக்கப் படுகின்றனர். பிரிட்டிஷ் எயர்வேஸ் வாடிக்கையாளர் சேவையில் வேலைக்கு விண்ணப்பித்த காரணத்தாலேயே, ஒரு பங்களாதேஷ் இளைஞர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டார். ஆரம்பப் பாடசாலைகளில் "குட்டிப் பயங்கரவாதிகளை" இனம் காணுவது எப்படி என்று, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பதாக பத்திரிகைகளில் செய்தி வந்தது.

இதைப் பற்றி எல்லாம் அக்கறைப்படாமல் உதிரிப் பாட்டாளிகளின் வர்க்கம் ஒன்று லண்டன் செழிப்பின் கீழே இயங்கிக் கொண்டிருக்கிறது. முதன் முதலாக கையில் காசில்லாமல் லண்டன் வரும் எல்லோரும், இந்த அடிமட்ட பொருளாதார இயந்திரத்திற்கு எண்ணை வார்த்திருப்பார்கள். அகதிகள், மாணவர்கள், சட்டவிரோத குடியேறிகள்... இப்படி அவர்களை எந்த வகையில் அடக்கினாலும், அவர்களின் குறிக்கோள் பொருளாதார சுபீட்சத்திற்கு தேவையான பணத்தை தேடுவது. இதனால் முதலாளிகளின், முகவர்களின் உழைப்புச் சுரண்டலுக்கு இலகுவாக ஆட்படுகின்றனர். மணித்தியாலத்திற்கு மூன்று பவுனுக்கும் (அரசு நிர்ணயித்த குறைந்த பட்ச கூலி 5.80 பவுன்கள்) தமது உழைப்பை விலை பேசும் வெளிநாட்டுப் பாட்டாளிகளின் படை மட்டும் இல்லையென்றால், இங்கிலாந்து எப்போதோ திவாலாகி இருக்கும்.

கனவுகளோடு லண்டன் வரும் இளவயதினர், எத்தனை கஷ்டப்பட்டு பவுண்களை சம்பாதிக்கின்றனர், என்பதை ஏற்கனவே பலர் பதிவு செய்துள்ளனர். ஆனால் அவர்களின் உபரி உழைப்பு, எத்தனை பேரின் ஆடம்பரக் கார்களாகவும், சொகுசு பங்களாவாகவும் மாற்றமடைந்துள்ளது, என்பதை புரிந்து கொண்டிருக்கிறார்களா தெரியவில்லை. தனது சொந்த இனச் சகோதரர்களின் முதுகில் சவாரி செய்து கொண்டே, "நான் உழைப்பால் உயர்ந்தவன்" என்று மார் தட்டுவோரை லண்டனில் தரிசிக்கலாம். சுரண்டலால் கிடைத்த லாபத்தில் ஒரு பங்கை கோயில் உண்டியலில் போட்டு விட்டு, தர்ம காரியத்திற்கு செலவிட்டதாக அரசிடம் வரிச்சலுகை பெறும் "புண்ணியாத்மாக்கள்" பலர் உண்டு.

Friday, September 11, 2009

சிறீலங்காவின் தமிழ் இனப்படுகொலையை மறைக்க ஐ.நா பொதுச் செயலர் செய்துகொண்ட உடன்படிக்கை - பான் கீ மூனின் கோரமுகம் அம்பலம்


சிறீலங்கா அரசாங்கம் மேற்கொண்ட தமிழ் இனப்படுகொலையை மறைக்க ஐக்கிய நாடுகள் (ஐ.நா) பொதுச் செயலர் மகிந்த அரசுடன் உடன்படிக்கை ஒன்றைச் செய்துகொண்டிருந்த மிகப்பெரும் உண்மையன்று அம்பலத்திற்கு வந்துள்ளது என இன்று வெள்ளிக்கிழமை வெளிவந்த "ஈழமுரசு" இதழ் தெரிவித்திருக்கின்றது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
அமெரிக்காவில் இருந்து வெளிவரும் வாஷிங்டன் போஸ்ட் செய்தி இதழே இந்த உண்மையை வெளியிட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே மாதம் போர் முடிந்த மறுநாள் (ஐ.நா.) சபையின் பொதுச் செயலாளர் சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் ஒரு கூட்டு உடன்படிக்கையை செய்துகொண்டுள்ளார்.
தமிழ் மக்களின் அழிவினைக் கூடப் பொருட்படுத்தாமல், தான் சர்வதேச ரீதியில் புகழ் பெறுவதற்காக ஒரு திட்டத்தை வகுத்திருந்த பான் கீ மூன் இந்த உடன்படிக்கையை செய்துகொண்டுள்ளார். அதாவது, பாதிக்கப்பட்ட தமிழர்களை அரசியல் ஆறுதலை வழங்குவதன் மூலமும், கைது செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ் மக்களை விடுவிப்பதன் மூலமும் இந்த புகழை அடைவதற்கு சிறீலங்காவின் இனப்படுகொலையை மூடி மறைக்கும் பெரும் திட்டத்தை வகுத்துள்ளார்.
அந்தத் திட்டத்தின் பிரகாரம் வன்னி மக்களை விடுவித்தால், அதற்கு பிரதி உபகாரமாக சிறீலங்கா மீது சுமத்தப்படும் போர்க் குற்றங்கள் சர்வதேச விசாரணைக்கு கொண்டுவரும் பட்சத்தில், ஐக்கிய நாடுகள் சபை அந்த விசாரணைக்கான ஆதரவினை வழங்காது எனவும், அத்துடன், சர்வதேச விசாரணைகள் இன்றி, போர்க் குற்றங்களை புரிந்த சிறீலங்கா இராணுவத்தினர் மீது சிறீலங்கா அரசாங்கமே விசாரணைகளை நடத்துவதா இல்லையா என்பதை முடிவு செய்யும் எனவும் தான் அறிவிப்பதாக அந்த உடன்படிக்கையை செய்துகொண்டுள்ளார்.
இந்த உடன்படிக்கை கொடுத்த துணிவிலேயே ஐ.நாவின் உயர் அதிகாரிகளும், மனித உரிமைவாதிகளும் உருவாக்க முனைந்த போர்க் குற்ற விசாரணைகளை சிறீலங்காவின் இராஜதந்திரிகளும், அரச உயர்மட்டத் தலைவர்களும் திமிருடன் அவற்றை உதாசீனம் செய்து புறக்கணிக்கும் துணிவைப் பெற்றிருந்தார்கள்.
இந்த அதிகார துஷ்பிரயோகத்தின் மூலம், உலகின் போர்க் குற்றவாளிகளை நீதியின் முன் கொண்டு வருவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் தவறிவிட்டார் என அமெரிக்காவில் வெளிவரும் வாஷிங்டன் போஸ்ட் இதழ் தனது செய்தியில் குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
இதேவேளை, மகிந்த ராஜபக்சவுடன் கூட்டுச் சேர்ந்து பணியாற்றுவதற்காக ஐ.நா. உயரதிகாரிகளையும் மனித உரிமை அதிகாரிகளையும் இலங்கையில் கொல்லப்படும் தமிழர்களின் எண்ணிக்கையை வெளியிட வேண்டாம் என பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார்.
அதற்காக அவை நம்பகத்தன்மை அற்றவை என்ற நொண்டிச்சாட்டையும் பான் கீ மூன் உருவாக்கினார் என அவருடன் நெருங்கிப் பணிபுரிந்து ஐ.நா. அதிகாரிகளே இப்போது குற்றச்சாட்டை முன்வைக்கத் தொடங்கியுள்ளனர். ஆனால், இத்தனையையும் மறைத்து இவரால் மகிந்த ராஜபக்சவிடம் இருந்து போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்த முடியவில்லை எனவும், இருநாள் போர் இடைவேளையையே அவரால் பெற முடிந்தது எனவும் கூறியுள்ள அவர்கள், இந்தப் படுகொலைகளை மறைத்ததன் மூலம் 20 ஆயிரம் தமிழர்களை அழிக்கும் அளவிற்கு மகிந்த ராஜபக்சவிற்கு இவர் துணைபோயுள்ளார் எனவும் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதேவேளை, சிறீலங்கா இனப்படுகொலையை நடத்திக் கொண்டிருந்தபோது, விடுதலைப் புலிகள் தமிழ் மக்களை மனித கேடயங்களாகப் பயன்படுத்துகின்றார்கள் என்றொரு குற்றச்சாட்டினை சர்வதேச ரீதியில் பலமாக முன்வைத்து சிறீலங்காவின் இனப்படுகொலையை நியாயப்படுத்தியதுடன், ஊக்கிவித்தும் உள்ளார் என குற்றச்சாட்டுக்கள் தற்போது அவரைச் சூழ உள்ளவர்களாலேயே எழுப்பப்பட்டு வருவதுடன், அவரது ஆளுமை பற்றிய சந்தேகங்களையும் எழுப்பி வருகின்றனர்.
பான் கீ மூனின் இந்தச் செயற்பாடுகளானது, ஐ.நா. இராஜதந்திரிகள் இடையே இவரின் இரண்டாவது பகுதி சேவைக்காலம் எதையும் சாதிக்க இயலாத பிரயோசனமற்ற சேவைக்காலமாகவே கருதுகின்றனர்.
இதுஇவ்வாறிருக்க, அதிகாரமற்ற மற்றும் நேர்மையற்ற தனத்தின் மூலம் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களின் படுகொலைக்கு சாட்சியாக இருந்ததுடன், சிறீலங்கா அரசாங்கத்தை போர்க் குற்றவாளியாக்க தவறியதன் மூலமும் ஐ.நாவின் கட்டமைப்பையும் ஐ.நாவின் கொள்கைகளையும் பான் கீ மூன் துஷ்பிரயோகம் செய்துள்ளார் என நோர்வேக்கான ஐக்கிய நாடுகள் வதிவிடப் பிரதிநிதி மோனா யூல் பகிரங்கமாக கண்டித்துள்ளார்.
நன்றி சங்கதி

Monday, August 3, 2009


புதைக்கப்பட்ட இலவசக்கல்வியும் விதைக்கப்படாத சமச்சீர்கல்வியும்.


ஒரு பொற்காலம் இருந்தது தமிழ்நாட்டில்.


பஞ்சை பராரிகளின் பரட்டைத் தலையை தடவிக் கொடுத்து பள்ளிக்குப் போகச் சொன்ன காலம் அது. கூழுக்கு உழன்ற ஏழைகளின் வாழ்வுக்கு உதவிய காலம் அது. கல்வியை முழுமையாக அரசே கையிலெடுத்துக்கொண்ட காலம் அது.

கையிலெடுத்துக்கொண்ட கல்வி சிந்தாமல் சிதறாமல் ஏழைக்குழந்தைகளின் வாழ்வைச் சென்றடைந்த காலம் அது.இன்றைய கல்வித்துறையில் ஏன் இத்தனை அவலம்? எத்தனை வகைப் பள்ளிகள்! நமது பள்ளிப்பிள்ளைகளில் எத்தனை வகை ஏற்றத்தாழ்வுகள்! எப்போது தோன்றின இந்தப்பிளவுகள்? ஏன் விளைந்தன இத்தனை வேறுபாடுகள்? காரணம் யார்? மக்களா? அரசா? ஆசிரியர்களா?

பள்ளிப்பருவத்திலேயே இத்தனை வேறுபாடுகளை விதைக்கிறோமே!... எதிர்காலத்தில் வேறுபாடற்ற சமுதாயம் எப்படி விளையும்? கேள்விகள் மட்டுமே இங்கே விளைகின்றன. விடைகளை விளைவிக்க யாரும் இல்லை.

தமிழ்நாட்டில் தற்போது இருந்துவரும் நான்கு வகையான பள்ளிகளையும், பாடத்திட்டங்களையும் ஒருங்கிணைத்து சமச்சீர் கல்விமுர்ரையைக்கொண்டுவரும் நோக்கத்தில் அரசாங்கம் ஒரு குழுவை அமைத்தது. குழுவும் ஆய்வறிக்கையை அரசுக்கு கொடுத்துவிட்டது. இந்த நான்குவகைப்பள்ளிகளில் மிக அதிகமான எண்ணிக்கையில் வளர்ச்சி பெற்றுக்கொண்டிருக்கும் மெட்ரிக் பள்ளிகளை கட்டுப்படுத்துவது எளிதான காரியமில்லை என்பது கல்வித்துறையை நன்கு அறிந்தவர்களுக்கு அன்றும் தெரியும்; இன்றும் தெரியும். “பிரச்சினையை ஆறப் போட வேண்டுமென்றால், அதை ஒரு கமிட்டியிடம் தூக்கிப்போடு” என்பது நிர்வாகத்தின் பாலபாடமென்பதும் தெரியும்.

இருந்தாலும், நல்லது ஏதாவது நடக்காதா, என்ற ஆசையோடு இருப்பவர்களுக்கு சமச்சீர்கல்வி பற்றி அரசு வாய்திறக்காமல் இருப்பது ஏமாற்றமளிக்கிறது. இன்று நடப்பதென்ன? அரசுப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைந்துவருகிறது. விளைவாக பள்ளிகள் எண்ணிக்கையும் குறையும்தானே? மாறாக, மெட்ரிக்பள்ளிகளின் எண்ணிக்கை அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது.

கல்வி அதிகாரிகள் ஒவ்வொருமாதமும் தலைமை ஆசிரியர்களின் கூட்டங்களை நடத்துவது வழக்கம். ஒரு காலத்தில், “மெட்ரிக் பள்ளி தலைமை ஆசிரியர்” என்ற இனமே அந்தக் கூட்டங்களில் இல்லாமல் இருந்தது. காலப்போக்கில் கடைசி இருக்கைகளில் ஓரிரு மெட்ரிக்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூச்சத்துடன் நெளிந்துகொண்டு உட்கார்ந்திருந்தனர். அதன்பிறகு “சாம்பலிலும் தமிழ்மணந்து வேகவேண்டும்” என்று ஆசைப்பட்டவர்களின் ஆட்சி வந்தது. இப்போதெல்லாம் மேலே சொன்ன தலைமை ஆசிரியர் கூட்டங்களில் மெட்ரிக்பள்ளி தலைமை ஆசிரியர்களின் ஆதிக்கம் அதிகமாகி, அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் நெளிந்துகொண்டு உட்கார்ந்திருக்கும் காலம் வந்துவிட்டது.

மெட்ரிக் பள்ளிகள் தனியாரின் சொத்துக்கள். அதாவது வருவாய் ஈட்டித்தரும் சொத்துக்கள். மெட்ரிக்பள்ளிகளின் நிர்வாகிகள் இப்போதே கோரிக்கை எழுப்பத் தொடங்கிவிட்டனர். பல இனங்களிலும் வரிக்குறைப்புகோரி குரலெழுப்பத்தொடங்கிவிட்டனர். வரிக்குறைப்பின் மூலம் மாணவர்களின் கல்விக்கட்டணம் குறையுமா என்ன?

அரசுப்பள்ளிகளில் அனுபவம்மிக்க ஆசிரியர்கள் இருக்கிறார்கள். அருமையான கல்விமுறை இருக்கிறது. மாணவர்களை ஆளுமை மிக்கவர்களாக மாற்றும் திறனுடைய ஆசிரியர்கள் இருக்கிறார்கள். குறைபாடு உடைய இடங்களும் இருக்கின்றன. ஆக்கபூர்வமான கண்டிப்பு அந்தக்குறைபாடுகளை நிச்சயமாக நீக்கிவிடும்..கல்வித்துறையின் குளறுபடிகளால் சமச்சீர்கல்வியை நடைமுறைப்படுத்துவதற்கான சூழல் சிக்கலாகிக்கொண்டுவருகிறது. தற்போது செயல்வழிக்கற்றல் என்ற கற்பித்தல் முறை அரசுப்பள்ளிகளில் கையாளப்பட்டுவருகிறது. இதே முறையை மெட்ரிக்பள்ளிகள் நடைமுறைப்படுத்தாமல் இருப்பதில் இருந்தே, அரசின் கையாலாகாத நிலை வெளிப்படுகிறது. ஏற்கனவே பாடத்திட்டத்தில் இருக்கும் வேறுபாடுகளை இதுபோன்ற புதிய திட்டங்கள் அதிகப்படுத்துமே அன்றி, குறைக்கப் போவதில்லை. எனவே சமச்சீர் கல்வி என்ற தத்துவம் சொல்லிக் கொள்ளாமலேயே விடைபெற்றுக் கொண்டுவிட்டது என்பது நிச்சயமாகத்தெரிகிறது.

அரசுப்பள்ளிகளில் சிறப்புக்கட்டணம் முழுமையாக இரத்து செய்யப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கதுதான். ஆனால் மெட்ரிபள்ளிகளிலும், தனியார் பள்ளிகளிலும் பல்லாயிரக்கணக்கணக்கான ரூபாய்கள் முறையான ரசீது இல்லாமல் நன்கொடை என்கிற பெயரில் வாங்கப்படுவதை எப்படி இந்த அரசு அனுமதிக்கிறது? இந்தப் பள்ளிகளில் தங்களுடைய குழந்தைகளை சேர்ப்பதற்கான விண்ணப்பத்தை வாங்குவதற்கு முந்தைய நாள் நள்ளிரவில் வரிசையில் ஏன் நிற்கவேண்டும்?

கல்வித்துறையின் இன்றைய செயல்பாடுகள் சாதாரணமக்களுக்கு திருப்தியளிப்பதாக இல்லை.

இன்றை நிலையில் தமிழ்நாட்டில் பணம் உள்ளவர்கள் “எதுவும்” படிக்கலாம். பணமில்லாத ஏழைகள் “ஏதோ” படிக்கலாம் என்பதே உண்மை.

ம.கோ.ராசா(கௌதம்ராஜா)

Saturday, July 18, 2009

எரிவதைப் பிடுங்கினால்தான் கொதிப்பது அடங்கும

ஆடு நீ... ஆடு நீ... ஓநாய் மாதிரி ஊளையிடாதே.... என்ற ஆட்டுக்குட்டிகளின் பாடலைக் கேட்க ஓநாய் அந்த ஏரியாவிலேயே இல்லை. அதன்பிறகு அதற்கு வாலும் இல்லை, வாலாட்டுவதுமில்லை. ஆளைப் பார்க்கவேண்டியது அவசியமில்லை, வாலைப் பார்த்தாலே போதும் என்பதை ஆடுகள் மட்டுமல்ல... அனைவருமே அறிந்துகொள்ளவேண்டும்.
உண்மைகளை வதந்திகள் என்றும் வதந்திகளை உண்மைகள் என்றும் நம்பவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாக யாராவது அழுது புலம்பினால், உடனேயே கண்ணீர்க் கூட்டணி அமைத்துவிடக்கூடாது. அழுபவர் கிளிசரின் போட்டிருக்கிறாரா என்பதை முதலில் தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டும். அதைவைத்து எது ஒரிஜினல், எது டூப்ளிகேட், எது வதந்தி, எது உண்மை என்பதையெல்லாம் விளங்கிக் கொள்ளமுடியும்.
கடந்த 60 ஆண்டுகளில் இப்போதுதான் என்றுமில்லாத அளவுக்கு பலவீனமாகி நிற்கிறோம்...
என்று மூக்கைச் சீந்துவது எதற்கு? நம்மை பலப்படுத்துவதற்கா, மனத்தளவில் பலவீனப்படுத்துவதற்கா? இவ்வளவு பாசத்தோடு நமக்கு பந்தி வைப்பவர்கள் பாயாசத்தை வைப்பார்கள் என்றா நினைக்கிறீர்கள்!
ராம் அண்ணன் அடுக்கெடுக்கிறார் என்பது கதை....மீண்டும் பாய்வார்கள் என்பது வதந்தி..... சாதித்துக் காட்டுவார்கள் என்பது கற்பனை... என்றெல்லாம் இப்போது எழுதியிருக்கும் இதே பேனா தான், 30 ஆண்டுகளாக பிரபாகரன் கட்டிவளர்த்த தமிழ் சாம்ராச்சியம் அவர் கண்களுக்கு முன்பே துகள்களாக உடைந்து நொறுங்கி மண்ணோடு மண்ணாகிவிட்டது என்று முன்பு எழுதியது. அதன்மூலம் தனது கண்ணீர் ஆனந்தக் கண்ணீர் என்பதை அழுத்தம் திருத்தமாகப் பதிவுசெய்தது. இத்தகைய பதிவால் தான், தாங்கள் யாரென்பதை அவர்கள் அடையாளம் காட்டுகிறார்கள்.

மிகக் கடுமையாக விமர்சித்து ராஜபட்சேவை கோபப்படுத்துவதால் பயனில்லை, அதனால் அப்பாவித் தமிழர்கள்தான் தேவையில்லாமல் பாதிக்கப்படுவார்கள் என்று தமிழ்நாட்டிலிருந்து ஒரு குரல் எழுகிறது. உணர்ச்சிப் பெருக்கோடு எதையாவது செய்ய முனைவது சிங்கள வெறியர்களை உசுப்பேற்றி விடும், அது வன்னியில் ஆபத்தில் இருப்பவர்களை பேராபத்தில் தள்ளும் என்று வெளி உலகிலிருந்து ஒரு குரல் வருகிறது. இரண்டுமே சாதுர்யம் பேசுகின்றன.

இவர்களை மாதிரி ஆட்கள், தகுதியே இல்லாதவர்களிடம் போய் தட்டேந்தி விடக்கூடாது என்பதற்காகத் தான் 1987 செப்டம்பரிலேயே மிகவும் தெளிவான தமிழில் பிரகடனம் செய்தான், எங்கள் இனத்தை எழுப்பிநிறுத்திய வீரத்தியாகி திலீபன்.

இழந்த உரிமைகளை நாம் மீட்டெடுக்கவேண்டும். மற்றவர்களைக் கொண்டு அதை வெல்லலாம் என்று எதிர்பார்க்கவே கூடாது என்றான் அவன், தனது வரலாற்றுச் சிறப்புமிக்க உண்ணாவிரதத்தைத் தொடங்கும்போது. நாட்டுக்காகத் தன்னைத் தியாகம் செய்த திலீபனின் வார்த்தைகளை தங்களுக்காக நாட்டைத் தியாகம் செய்பவர்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்று நாம் எதிர்பார்ப்பதில் நியாயமில்லை.

திலீபன் பேசியது, செப்டம்பர் 14ம் தேதி.. அதற்கு 40 நாளுக்கு முன், ஆகஸ்ட் 4ம் தேதி சுதுமலையில் பேசினார் பிரபாகரன். அந்தப் பேச்சு ஒரு தேர்ச்சி பெற்ற அரசியல் தலைமையின் பேச்சுக்கு இணையானதாக இருந்தது. 1987 ஜூலை 29ல் ராஜீவ்-ஜெயவர்தன ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.

அந்த ஒப்பந்தம் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வாக இல்லை. அதை ஏற்கமறுக்கும் பிரபாகரனிடம், நீங்கள் இதை ஏற்காவிட்டாலும் பரவாயில்லை, எதிர்க்காதீர்கள் என்கிறது இந்தியா. பிராந்திய வல்லரசான இந்தியாவுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க முன்வருகிறார் பிரபாகரன். மறுவாரம், சுதுமலை கூட்டத்தில் மக்களைச் சந்திக்கிறார். அந்தக் கூட்டத்தில் பிரபாகரன் பயன்படுத்திய வார்த்தைகள் வரலாற்றின் கவனத்தில் வைக்கப்படவேண்டியவை.
நாம் இந்த ஆயுதங்களை இந்தியாவிடம் ஒப்படைக்கும் கணத்திலிருந்து, எம் மக்களுக்கான பாதுகாப்புப் பொறுப்பையும் இந்தியாவிடம் ஒப்படைக்கிறோம் என்றார் பிரபாகரன். இதைவிட நறுக்குத் தெறித்தாற்போல் வேறெவர் பேசமுடியும்? இதுதான் சுருங்கச் சொல்லி விளங்கவைத்தல். இந்தியாவுக்கு மட்டும் எப்படி இது விளங்காதுபோயிற்று? அந்த மக்களை, ராஜீவின் ராணுவம் பாதுகாத்த லட்சணம் என்ன?

புலிகளுக்கும் இந்தியாவுக்கும் இடையில் பிரச்சினையை ஏற்படுத்தவே, அவர்களை இங்கே வரவைத்து இவர்களுடன் மோதவிட்டேன் என்று வெளிப்படையாகவே சொன்னார் ஜெயவர்தன. ஸ்மார்ட் ஆக இல்லாததால் தான், ராஜீவ் தரப்புக்கு இது புரியாமல் போயிற்று. தொப்புளாவது கொடியாவது என்று தப்புதப்பாக இந்தியா முடிவெடுப்பது அப்போதிருந்துதான். இந்த இந்தியாவின் துணையுடனா ஸ்மார்ட் பவர் பேர்வழிகள் தேரை நகர்த்தப் போகிறார்கள்!
இவர்கள் தேரையும் நகர்த்தவேண்டாம், போரையும் நடத்தவேண்டாம். தாமதமில்லாமல் செய்யவேண்டிய வேலைகளில் ஈடுபட தாமாகவே முன்வரும் ஈடுஇணையற்ற சக்தியான இளைய தலைமுறையினரைக் குழப்பாமல் இருந்தால் அதுவே மிகப்பெரிய உதவியாக இருக்கும்.
வதை முகாம்களில் உள்ள மூன்று லட்சம் தமிழர்கள் என்ன செய்யப்படுவார்கள் என்பது கோதபாயவுக்கே தெரியாது. மகிந்த ராஜபட்சேவை என்ன செய்வதென்றே அவன் இன்னும் முடிவு செய்யவில்லை. இந்தநிலையில், 180 நாளில் மீள்குடியேற்றம் என்று ராஜபட்சே சொல்வதை, வடிகட்டிய அறிவாளியான இந்தியாவைத் தவிர வேறெவரும் நம்பப்போவதில்லை. 880 சதுர கிலோமீட்டர் கொண்ட யாழ்குடாவில், 160 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பு உயர் பாதுகாப்பு வலயங்களில் சிக்கி பல ஆண்டுகள் ஆகிவிட்டன.
இத்தனை ஆண்டுகளாக யாழ்ப்பாணத்தில் நடந்துவிடாத மீள்குடியேற்றம், 180 நாளில் வன்னியில் நடந்துவிடப் போகிறதா? அறிவுள்ளவர்கள் இப்படித்தான் யோசிப்பார்கள். ராஜபட்சேவுக்கு கருணை மனு எழுதிக்கொண்டிருக்கமாட்டார்கள். நடந்த இனப்படுகொலைக்கு சாட்சியங்களாகத் திகழ்ந்தவர்கள் மருத்துவர்கள் சத்தியமூர்த்தி, வரதராஜா, சண்முகராஜா போன்றோர். அவர்களைப் போன்றவர்கள் சர்வதேச சமூகத்தின் பாதுகாப்பில் இருந்தால்தான், உண்மைகள் வெளிவரும்.
அவர்கள் கோதபாயவின் பிடியில் இருந்தால், ஹிந்து பத்திரிகையின் மொழியில்தான் பேசவேண்டி இருக்கும். முல்லைத்தீவில் விமானத்திலிருந்து குண்டுவீசியது இலங்கை விமானப்படையினர் அல்ல, புலிகள்தான் விமானத்திலிருந்து குண்டுவீசினார்கள் என்றுகூட சொல்லவேண்டியிருக்கும்.
இது நம்முடைய கருத்து மட்டுமல்ல. சர்வதேச அமைப்பான அம்னஸ்டியும் இதைத்தான் சொல்கிறது. தங்களுடைய மக்களைக் கைவிட்டுவிடாமல் பங்கருக்கு உள்ளே இருந்துகூட மருத்துவம் பார்த்த அந்த மருத்துவர்கள் உள்ளேயும், ராஜபட்சே கும்பல் வெளியேயும் இருப்பது மனித இனத்துக்கே அவமானம். அந்த மருத்துவர்களை வெளியே கொண்டுவர உடனடி நடவடிக்கைகள் தேவை.

ஒரே ஆண்டில் ஒரு லட்சம் பேரையும் ஒரே நாளில் பல்லாயிரக்கணக்கானோரையும் கொன்று குவித்து இனவெறியாட்டம் நடத்திய ராஜபட்சே சகோதரர்களையும் சிங்கள அதிகாரிகளையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தும் நடவடிக்கைகளை எடுப்பதற்கான சர்வதேச சூழல் உருவாகியிருக்கிறது. உலகெங்கிலுமுள்ள மனித உரிமை அமைப்புகளை ஒருங்கிணைத்து அவர்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த தமிழ் மாணவர்களாலும் இளையோராலும் நிச்சயமாக முடியும்.
தங்களைக் காத்துக் கொள்ளவேண்டிய நிலைக்கு அந்த அரக்கர்கள் தள்ளப்படும்போதுதான், இலங்கையின் திமிர் அடங்கும். தமிழரின் குரல்வளையின் மீதான பிடி விலகும். இதன் முதல்படியாக, நடந்த இனப்படுகொலை தொடர்பான ஆவணப்படங்கள் போன்றவற்றை உலகெங்கிலுமுள்ள முக்கிய பல்கலைக்கழகங்களில் திரையிடத் தேவையான முயற்சிகளை இளையோரும் மாணவர்களும் எடுக்கலாம். ராஜபட்சேயின் பொய்முகத்தை உலக அரங்கில் அம்பலப்படுத்துவதற்கான முதல்படி இது.
அடுத்த படி இதைவிட முக்கியமானது.

எரிவதைப் பிடுங்கினால்தான் கொதிப்பது அடங்கும் என்கிற யதார்த்தம் ராஜபட்சேக்களுக்கும் பொருந்தும். உண்மையில் எதைப் பெற ராஜபட்சேக்கள் தகுதியானவர்களோ அதை அவர்கள் பெற ஆவன செய்ய ஆரம்பித்தாலே போதும், ஆட்டம் அடங்க ஆரம்பித்துவிடும். தன்னுடைய சொந்தமக்கள் மீதே விமானங்கள் மூலம் குண்டுவீசும் நாடு என்னுடைய இலங்கைதான். இதைச் சொல்வதற்காகத் தான் என்மீது தேசத் துரோகி என்று முத்திரை குத்தப்படுகிறது. இதைச் சொல்வதுதான் தேசத்துரோகம் என்றால் அந்த முத்திரையைப் பெருமையுடன் ஏற்கிறேன் என்று வெளிப்படையாகப் பேசியதற்காகவே கொல்லப்பட்டான் லசாந்த.

மகிந்தவின் நண்பனான லசாந்த விக்கிரமதுங்க கொல்லப்பட்டதில் மகிந்தவுக்குத் தொடர்பிருப்பதாக சர்வதேச பத்திரிகையாளர்கள் வெளிப்படையாகவே குற்றஞ்சாட்டினர். லசாந்த படுகொலையிலிருந்து முள்ளிவாய்க்கால் பயங்கரம் வரை சர்வதேச அரங்கில் ராஜபட்சேக்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதற்கான வலுவான ஆதாரங்கள் எக்கச்சக்கமாய் இருக்கின்றன. உலகின் எந்த இனவெறியனுக்கு எதிராகவும் இவ்வளவு ஆதாரங்கள் கிடைத்ததில்லை. ஆனால் இவ்வளவு ஆதாரங்கள் இருப்பது தெரிந்தும், தங்களைத் திசைதிருப்பப் பரப்பப்படும் வதந்திகளால் தடுமாறுகிறது தமிழ்ச் சமூகம்.

ஆம்புலன்ஸில் தப்பமுயற்சித்தபோது சுட்டோம், நந்திக் கடலில் உடல் கிடைத்தது, எரித்துவிட்டோம், கடலில் கரைத்துவிட்டோம், கோடாரியால் வெட்டினோம்........ என்பதெல்லாம் 100 வீதம் உடான்ஸ். எதற்கு இப்படிப் பொய்சொல்லவேண்டும்? இப்படியெல்லாம் புதிய புதிய வதந்திகளைக் கிளப்பி விட்டுக்கொண்டே இருந்தால் தான், அதி புத்திசாலிகளான நாம் அதைப் பற்றியே கவலைப்பட்டுக் கொண்டிருப்போம். இருக்கிற ஆதாரங்களை ஆவணப்படுத்தி, ராஜபட்சேவைக் கூண்டில் ஏற்றும் வேலையை அடியோடு மறந்துவிடுவோம். இதைத்தான் எதிர்பார்த்தது இலங்கை. அதைத்தான் செய்கிறோம் நாம்.

எனவே, ராஜபட்சேக்களைக் கூண்டில் ஏற்றும் முயற்சியில் இளையோர் அதிலும் குறிப்பாக மாணவர்கள் முழுமூச்சோடு இறங்கவேண்டும். கொலைவெறி அடங்காத ராஜபட்சேக்களுக்குக் கிடுக்கிப்பிடி போட்டால்தான், அவர்களுக்கு சர்வதேச அரங்கில் தண்டனை நிச்சயம் என்கிற நிலையைச் சந்தேகத்துக்கு இடமில்லாமல் ஏற்படுத்தினால்தான், கொதிப்பது அடங்கும்.
அவர்களை ஆத்திரப்படுத்துவதைவிட அம்பலப்படுத்துவதுதான் இப்போதைக்கு முக்கியம். இப்படியொரு நிலையை உருவாக்க முயலும்போது இதற்கு என்னென்ன விதத்திலெல்லாம் முட்டுக்கட்டைகள் போடப்படும் என்று முதலிலேயே ஆலோசிப்பதும் அதை எப்படிச் சமாளிப்பதென்று முன்கூட்டியே தீர்மானிப்பதும் அவசியம்.

சர்வதேச அரங்கில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுவதற்கான சகல 'தகுதி'களும் ராஜபட்சேக்களுக்கு இருக்கிறது. அந்தக் கூண்டில் நிறுத்தப்பட்டால், தண்டனையிலிருந்து அவர்களால் தப்பிக்கவே முடியாது. அதனால்தான், அந்தக் கூண்டில் நிறுத்தப்படுவதைத் தடுக்க தனக்கு முட்டுக்கொடுக்கும் நாடுகளின் காலில் தட்டுத்தடுமாறி விழுந்து எழுந்துகொண்டிருக்கிறார்கள் "இந்தியாவின் போரை நடத்தியவர்கள்".
குற்றவாளிக் கூண்டில் அவர்களை நிறுத்தியபிறகு செய்யவேண்டிய வேலைகளை இப்போதே பட்டியலிட முடியும். ஆனால், இப்போதைக்கு நாம் தாமதமின்றிச் செய்யவேண்டியது, குற்றவாளிக் கூண்டில் அவர்களை நிறுத்தத் தேவையான வேலைகளைத்தான். குற்றவாளிக் கூண்டில் ராஜபட்சேக்களை ஏற்ற, சர்வதேச சமூகத்தை அணுகுவதற்குமுன், உலகெங்கும் சிதறிக்கிடக்கிற தமிழ்ச் சமூகத்தை அணுகுவது அவசியம்.

அந்தப் பணியையும் கூட தமிழ் மாணவர்களே முன்னெடுப்பது நல்லது. ஐரோப்பிய நாடுகளிலும், பிரிட்டன், கனடா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட அயல்நாடுகளிலும் வசிக்கும் புலம் பெயர்ந்த மாணவர்கள் உடனடியாகக் கூடிப்பேசி, ஒரு குறிப்பிட்ட நாளில் உலகெங்கும் மனிதச் சங்கிலி அமைப்பதென்று தீர்மானிக்கலாம். (போராட்டத்தின் வடிவம் வேறுமாதிரியாகவும் இருக்கலாம். அது ஜனநாயக முறைப்படி கலந்துபேசி எடுக்கப்படவேண்டிய முடிவு.)

போர்க்குற்றங்களுக்காக ராஜபட்சேக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கைக்கு உலகெங்கும் ஆதரவு திரட்டும் தூதுக்குழு ஒன்றையும் அவர்கள் அமைக்கவேண்டும். அந்தத் தூதுக்குழுவில், மாணவர்களும் மாணவிகளும் சம எண்ணிக்கையில் இடம்பெறவேண்டும். அந்தத் தூதுக்குழு தனது பணியைத் தமிழகத்திலிருந்தே தொடங்கலாம்.
தமிழகத்துக்கு வருகிற மாணவர்கள் தூதுக்குழு, முதலில் முதல்வர் கலைஞரையும்,அடுத்ததாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவையும், அதைத் தொடர்ந்து மற்ற அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்தித்துப் பேசலாம். ராஜபட்சேக்களைக் கூண்டிலேற்று என்கிற ஒற்றைக் கோரிக்கையுடன், இரவு-பகல் என்கிற வித்தியாசமெல்லாம் பார்க்காமல் ஒரே நாளில்-ஒரே சமயத்தில் உலகமெங்கும் மனிதச் சங்கிலி நடத்தத் தீர்மானித்திருப்பதை அவர்களிடம் எடுத்துச் சொல்லலாம்.

அதற்குத் தேவையான ஆவணங்களைக் காட்டுவதன்மூலம், அவர்களது ஆதரவை நிச்சயமாகப் பெறமுடியும். தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக, அவரை ஏன் பார்க்கவேண்டும், இவரை ஏன் பார்க்கவேண்டும், அவர் வந்துவிடுவாரா, இவர் வந்துவிடுவாரா என்றெல்லாம் கேள்வி எழுப்பும் அதிமேதாவிகளை அலட்சியப்படுத்தி அனைவரையும் சந்திப்பது மிக மிக முக்கியம். அந்த மனிதச் சங்கிலிக்கு தாய்த் தமிழகத்தில் அனைத்துத் தரப்பினரின் ஆதரவையும் உறுதி செய்தபிறகு, உலகெங்கும் பயணம் செய்து அந்தத் தூதுக்குழு ஆதரவு திரட்டலாம்.

செல்லும் இடமெல்லாம் அவர்களை வரவேற்க ஊரே கூடியிருக்கும். உலகெங்கிலும் மட்டுமல்ல, சென்னையிலும் அவர்களுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க வரவேற்பு கிடைக்கும். அன்றைய தினம் சென்னையில் அந்தத் தூதுக்குழுவை வரவேற்க, தமிழகம் முழுவதிலுமிருந்து மாணவர்கள் திரளுவார்கள் என்று இப்போதே சொல்கிறேன்.... எழுதிவைத்துக் கொள்ளுங்கள்.

இந்த விஷயத்தை மாணவர்கள்தான் முன்னெடுக்கவேண்டும் என்று மீண்டும் மீண்டும் குறிப்பிடுவதற்கு ஒரு வலுவான காரணம் இருக்கிறது. பழைய ஆசாமிகள் காகிதப் புலிகளாகவும் காமெடி எலிகளாகவும் மாறிவிட்டபிறகு, உலக வீதிகளில் எங்கள் தேசியத் தலைவர் பிரபாகரன் என்கிற பதாதைகளுடன் துணிவுடன் வலம் வந்தவர்கள் இந்த இளைய புலிகள்தான்.
ராஜபட்சேக்களைக் கூண்டிலேற்று என்கிற தமிழ் மாணவர்களின் கோரிக்கையுடன் இரவென்றும் பகலென்றும் பாராமல் உலகம் முழுக்க ஒரே சமயத்தில் கோடானுகோடித் தமிழர்கள் கை கோத்து நிற்பது உலகின் மனசாட்சியை உலுக்கும், ராஜபட்சேவின் அலரி மாளிகையைக் குலுக்கும், ராஜபட்சேக்களுக்கும் குற்றவாளிக் கூண்டுகளுக்கும் இடையே அமைக்கப்பட்டுள்ள முட்டுக்கட்டைகளைத் தகர்க்கும். அதற்குப் பிறகு மவுண்ட் ரோடு மகாவிஷ்ணுக்களாலோ அக்பர் ரோடு அக்காக்களாலோ கூட மகிந்த ராஜபட்சேவைக் காப்பாற்றமுடியாது.

இப்படியொரு வரலாற்றுச் சிறப்புமிக்க மனிதச் சங்கிலியை அமைக்க உலகெங்கிலும் இருக்கும் எங்கள் தமிழ் இளையோராலும் மாணவர்களாலும் நிச்சயமாக முடியும். ஒட்டுமொத்தத் தமிழினத்தையும் கைகோத்து நிற்கவைப்பதற்கான தகுதியும் உறுதியும் இந்தப் பொடியன்களுக்கு இருக்கிறது. தங்களுக்காக தாயகக் களத்தில் உயிர்நீத்த ஆயிரமாயிரம் மாவீரர்களை மனத்தில் சுமந்துகொண்டிருக்கும் இந்த இளைய தலைமுறைக்கு, இப்படியொரு வரலாற்றைப் படைக்கவேண்டிய கடமயும் இருக்கிறது.

சர்வதேச அரங்கில், போர்க் குற்றவாளியாக ஒரு சிங்கள இனவெறியன் அல்லது வெறியர்கள் நிறுத்தப்படும் போதுதான், இலங்கையின் ஆணவமும் அராஜகமும் அடக்குமுறை மற்றும் ஒடுக்குமுறையும் அடங்கும். அப்படியொரு நிலையில், எப்படியெல்லாம் தமிழினத்தை நசுக்கலாம் என்று யோசிக்கக்கூட நேரமின்றி, எப்படித் தங்களைக் காப்பாற்றிக்கொள்வது என்று யோசிப்பதற்கு மட்டுமே ராஜபட்சே கும்பலுக்கு நேரமிருக்கும்.
ஒட்டுமொத்த சிங்கள வெறியர்களின் நச்சுப்பல் பிடுங்கப்படும். அதன்மூலம் முகாமுக்குள்ளேயே முடிந்து போக இருக்கும் 3 லட்சம் தமிழர்களின் மூச்சுக்காற்று உயிர்த்தெழும். அவர்களைப் பேணிப் பாதுகாக்கவேண்டிய நிலை ராஜபட்சேவுக்கு ஏற்படும். ஆக, எரிவதைப் பிடுங்கினால் தான் கொதிப்பது அடங்கும்.

ராஜபட்சேவை ஆத்திரப்படுத்தாதீர்கள் என்று சொல்வது அர்த்தமற்றது என்பதை, அப்படிச் சொல்பவர்களுக்கு முதலில் எடுத்துச் சொல்லவேண்டியது அவசியம்தான். அதே சமயம், நம்மீதான அக்கறையில்தான் அவர்கள் அப்படிச் சொல்கிறார்கள் என்பதை நினைவில் வைத்திருக்கவேண்டும். அவர்கள் கையையும் பற்றியபடிதான் மனிதச் சங்கிலி அமைக்க முடியும்.
இதையெல்லாம் எடுத்துரைக்க எழுத்தைப் பயன்படுத்தாமல், இறக்காதவர்களுக்குக்கூட இறப்புச் சான்றிதழ் எழுதி புழுதி கிளப்பிக் கொண்டிருப்பவர்கள் இனியாவது உருப்படியான வேலைகளில் இறங்குவார்களாக! எவருக்கும் துதி பாடுவது எனது நோக்கமல்ல என்று சொல்லிக்கொண்டே துதி பாடுவது சுமந்த வயிற்றுக்கும் அழகல்ல, சுமக்கும் மண்ணுக்கும் அழகல்ல.

மனிதாபிமான நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பதை உலகுக்கே எடுத்துக் காட்டியுள்ளோம் என்று ராஜபட்சே குறுக்குசால் ஓட்ட முயல்வது, இலக்கை விட்டுவிட்டு உலக்கை போட்டுக்கொண்டிருக்கும் சிலரது அறியாமையால் தான்.

எனவே, துளியும் தாமதமின்றி அடுத்த கட்டத்துக்கு நகர்வோம். நச்சு எலிகள் தப்பிக்கவே முடியாதபடி கிடுக்கிப்பிடி போட்டுப் பிடிப்போம். அதற்காக, மனிதச் சங்கிலியோ,, அதைவிட மகத்தான பணியோ... எதுவாயிருந்தாலும் அவற்றில் அளவுகடந்த ஈடுபாடு காட்டுவோம். நமது எழுச்சி, எதிர் நிலையில் இருப்போரைக்கூட நம்முடன் இணைந்துகொள்ளச் செய்யும்.
பெரியகுளத்துக் கவிஞன் மு.மேத்தா சொன்னதைப் போல்,
நம்பிக்கை நார் மட்டும் நம் கையில் இருந்தால்
உதிர்ந்த மலர்கள்கூட ஒவ்வொன்றாய் வந்து ஒட்டிக்கொள்ளும்!
கண்ணீரைத் துடைத்து எறிந்துவிட்டுஇ உறுதியோடும் நம்பிக்கையோடும் ஓர் உண்மையான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல ஒவ்வொருவரும் முன்வருவோம்.

வாகரை முதல் முள்ளிவாய்க்கால் வரை
நம் சொந்தங்களை ரத்தம் சிந்தவைத்த
நச்சுப் பாம்புகளை நையப்புடைப்போம்....
ரத்தம் குடித்த ராஜபட்சிகளை
சர்வதேச கூண்டில் ஏற்றுவோம்....
இறக்கை என்பது இயற்கையின் எல்லை,
இயலாதென்று முயலாதவர்கள்
இறக்கை இருந்தும் பறப்பது இல்லை.
முத்துக்குமாரின் நினைவோடு
ஒட்டுமொத்த உலகத்தையும்
திரும்பிப் பார்க்கவைத்த
எங்கள் இளையோரின் அகராதியில்
இயலாது என்ற வார்த்தையே இருக்க இயலாது.
அந்தப் பொடியன்களின் தலைமையில்
உலகத் தமிழினத்தைக் கைகோக்க வைப்போம்....
களங்கத்தைத் துடைப்போம்... வரலாறு படைப்போம்!
ராஜபட்சேக்களைக் கூண்டில் ஏற்றுவதுதான், கம்பிவேலிகளுக்குப் பின்னால் கண்ணீருடன் நிற்கும் எங்கள் சொந்தங்களுக்கு விடுதலை வாங்கித் தரும். ராஜபட்சேக்கள் உள்ளே போகிறவரை, எங்கள் சொந்தங்கள் வெளியே வரமுடியாது என்பதை மனத்தில் நிறுத்தி,இன்றே இப்போதே களத்தில் இறங்குவோம்.
தமிழ்க்கதிருக்காக,
காற்றுக்கென்ன வேலி திரைப்பட இயக்குநர்
- புகழேந்தி தங்கராஜ்